தமிழ்நாடு நாள்!

தமிழ் நாடு நாள்!

இன்று தமிழ் நாடு நாள்.

01-11-1956 -ஆம் நாளில் குமரி மாவட்டம் தமிழ் நாட்டுடன் இணையுமுன், அம்மக்கள்மீது அன்றைய திரு-கொச்சி அரசு ஏவிய கொடுமைகளை நினைவுகூரும் நாள்.

ஆங்கிலேயர் நாளில்கூட அடக்குமுறைகள் அவர்கள்மீது அவ்வளவாயில்லை. ஆனால், பட்டம் தாணுபிள்ளையின் அரசோ மீண்டும் அவர்களை அடிமைப் படுத்தியது; அடக்கியே வைத்திருந்தது.

தமிழர், தமிழ் பயில இயலாது; தமிழருக்கு, அரசுப் பணியிலும் இடம் கிடையாது. கல்வியில் சிறந்திருந்தும், கயமைச் சாதியின் பெயரால் புறக்கணிப்பு. காசு ஒதுக்கீடுகளிலும், வளர்ச்சித் திட்டங்களிலும், கன்னியாகுமரி முற்றிலும் ஒதுக்கி வைப்பு.

கேட்டவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். போராடியவர்கள் அடித்து நொறுக்கப்பட்டார்கள்.
“கண்டால் அறியாம்” என்ற கூற்றின்படி, கண்டபடிச் சுட்டுத் தள்ளப்பட்டார்கள்.

ஆனால், நொண்டியாக்கப் பட்டும் அவர்கள் விழுந்துவிடாமல், மீண்டும் ‘குஞ்சன்நாடர்களாய்’ எழும்பினார்கள்.

கையில் விலங்கிடப்பட்டும், கால் முதல் தலை வரை அடிக்கப்பட்டும், குழித்துறை ஆற்றில் குதித்துத் தப்பி, ‘மணிகளாய்த்’ திரும்பி வந்து, வீர முழக்கமிட்டார்கள்.

உயிரிழந்தவர் பலர், உடமையிழந்தவர் பலர், ஓடி ஒளித்தவர் பலர், ஒப்பனையிட்டு மறைந்திருந்தவரும் உண்டு சிலர்.

இப்படியெல்லாம் இவர்கள் இழந்தபின்னரே, இறுதியாக, இன்பத் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டார்கள்.

அந்த நாள்தான் 01-11-1956.

இங்கு வந்தபின் இவர்கள் மேன்மேலும் வளர்ந்தார்களா?

வளர்ந்தார்கள்; ஆனால் வளர்த்தியது அரசு இல்லை! கல்வியும், கடின உழைப்பும், எல்லாவற்றிற்கு மேலாக, கடவுளின் அருளுமே அவர்களை உயர்த்தியதேயன்றி, அரசுகள் துரும்பையுந் தூக்கவில்லை!

செய்யமாட்டேன் என்றுகூறித் தமிழ் நாட்டில் சேர்த்த காமராசர், முன்பு கல்லடிப் பட்டிருந்தும், அவர்களுக்குச் சிலவற்றைச் செய்தார். அவர்களும், அவரை நன்றியோடு பார்த்தார்கள்.

ஆனால், அவருக்குப்பின் வந்தவர்களுக்கு, நெல்லை எல்லையாயிற்று; குமரியோ தொல்லையாயிற்று!

ஆட்சிக்கு வந்துவிட்டால் அனைவரும் அசுரரோ?

தெரியாமல் கேட்கும்,
-கெர்சோம் செல்லையா.

எங்கு சேர்க்கிறோம்?

எங்கிருக்கிறது என் சொத்து?

கிறித்துவின் வாக்கு: லூக்கா12:21

21தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
இங்கு சேர்க்கும் சொத்தில் சிறிது
இந்திய ஏழைக்கீவதினால்,
அங்கு விண்ணில் ஆண்டவருக்கு,
அளிக்கும் கடனாய்ப் பெருத்திடுதே.
தங்க மாளிகை கட்டி எழுப்பி,
தவற்றைக் காசாய்க் குவிப்பதினால்,
எங்கு எவர்க்கும் பயனில்லாது,
இறைமுன் கடுகாய்ச் சிறுத்திடுதே!
ஆமென்.

இன்று அழைத்தால்?

இன்று அழைத்தால்?

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:20.

20தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
என்று செல்வேன், எப்படிச் செல்வேன்,
என்று அறியா என் வாழ்வில்,
இன்று வாயென இறைவன் அழைப்பின்,
என்ன சொல்லி எதிர் கொள்வேன்?
ஓன்று மட்டும் உணர்ந்து சொல்வேன்;
என் பணி முடிந்ததா எனக் கேட்டு,
நன்கு அப்பணி நானும் முடித்து,
நன்றி சொல்லி, உடன் செல்வேன்!
ஆமென்.

கேட்டேன், கேட்டேன்!

கேட்டேன், கேட்டேன்!
  கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:16-19.

16அல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.
17அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே;
18நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையம் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து,
19பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.

கிறித்துவில் வாழ்வு:
பத்தின் நாளில், நூறினைக் கேட்டேன்.
பல நூறானபின், ஆயிரம் கேட்டேன்.
சொத்தும் சேரவே, இலட்சம் கேட்டேன்.
சொந்தமாகவே, கோடிகள் கேட்டேன்.
வித்தை கற்றிட, காசுகள் கேட்டேன்;
வேலை கிடைக்கவே, திருப்பிக் கேட்டேன்.
நித்தமும் உம்மிடம் சொத்தே கேட்டேன்;
நேர்மை இல்லை, அதனால் கெட்டேன்!
ஆமென்.





மீட்கும் அறிவை வளர்ப்போம்!

மீட்கும் அறிவை வளர்போம்!

நமது அறிவியல் ஆய்வுகள் யாவும்,
நலிவினில் மீட்கப் பயன் தருதா?
சமருக்கான அணுகுண்டெல்லாம்,
சாவைத் தடுக்க உடன் வருதா?
எமது அறிவால் விண்கலம் விட்டோம்,
என்ற பெருமை வீண் விருதா!
அமைதியாக ஆழ்குழி பார்ப்போம்;
அவர்கள் என்ன மாடெருதா?

-கெர்சோம் செல்லையா.

உடல், பொருள், ஆவி !

உடல், பொருள், ஆவி!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:15.

15பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
உடல், பொருள், ஆவி மூன்றுமிருக்க,
உடலின் தேவையைத் தேடுகிறோம்.
கடல் அலை போன்று அவாவும் தொடர, 
காசினைப் பெருக்க ஓடுகிறோம்.
அடல் வெறி கொண்டு அடுக்கும் பொருளோ,
அழிவது கண்டு வாடுகிறோம்.
மடயரின் வரிசையில் நின்றது போதும்;
மறைநூல் வாக்கை நாடிடுவோம்!
ஆமென்.

குத்தகை என்று எண்ணி….

குத்தகை என்றே எண்ணுவோம்!கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:13-14.

13அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஆஸ்தியைப் பாகம்பிரித்து என் வீதத்தை எனக்குத் தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.
14அதற்கு அவர்: மனுஷனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
சொத்திற்காகச் சொந்தம் பகைக்கும்,
சொல்லை விரும்ப உலகோர்க்கு,
வித்தை செய்து, பங்கு பிரிக்கும்,
வேலை செய்யுமோ விண்ணரசு?
மொத்தச் சொத்தும் இறையீவாகும்,
மீட்பு நிலை கண்டோர்க்குக்
குத்தகையென்றே எண்ணத் தோன்றும்,
கொடுக்கப்பட்ட மண்ணரசு!
ஆமென்.

நடுவர் முன்பு என்செய்வேன்?

நடுவர் முன்பு என்செய்வேன்?
கிறித்துவின் வாக்கு:லூக்கா 12:11-12.

11அன்றியும், ஜெபஆலயத்தலைவர்களுக்கும் துரைத்தனத்தார்களுக்கும் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களைக் கொண்டுபோய் விடும்போது: எப்படி, என்னத்தை மாறுத்தரமாகச் சொல்லுவோம் என்றும், எதைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்.12நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
அடிப்பார், உதைப்பார், அவமதிப்பார்;
அவரது அறிவினில்தான் நடப்பார்.
பிடிப்பார், இழுப்பார், வழக்குரைப்பார்;
பொய்ச் சான்றினில்தான் கிடப்பார்.
இடிப்பார் இவருக்கில்லையென்பார்.
இல்லை, இறைவன்தான் காப்பார்.
துடிப்பார் மீள என்செய்வார்?
தூய வாக்கால்தான் மீட்பார்!
ஆமென்.

பொறுக்கப் படுவீர்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:10.
10எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான விசேஷத்தைச் சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்த ஆவிக்கு விரோதமாய்த் தூஷணஞ் சொல்லுகிறவனுக்கோ மன்னிக்கப்படுவதில்லை.


கிறித்துவில் வாழ்வு:


சொல்லும் கிறித்துவை நம்பார் பின்னர்,

சொற்படி நடந்தால் மீட்படைவார்.

வெல்லும் ஆவியர் செயலின் முன்னர்,

வெறுப்புமிழ்ந்தால் கேடடைவார்.

கொல்லும் கொடிய வாக்குரைப்பார்,

குறைகளுணர்ந்தால் அருளடைவார்.

நில்லும் என்று உரைத்தும் கேளார்,

நேர்வழி காணா இருளடைவார்!


ஆமென்.

துணிவுடன் உரைப்போம்!

துணிவற்றவரே கேளுங்கள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:8-9.

8 அன்றியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை மனுஷகுமாரனும் தேவதூதர் முன்பாக அறிக்கைபண்ணுவார்.9 மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவதூதர் முன்பாக மறுதலிக்கப்படுவான்.

கிறித்துவில் வாழ்வு:
தூய ஆவியர் துணையாயிருக்கத்
துணிவிற்குப் பஞ்சம் வராது.
ஆய கலைகள் அனைத்தும் கொடாத
அறிவிற்கும், குறைவு இராது.
மாயவலையில் சிக்குண்டோரே,
மறந்து இறையருள் பெறாது,
நேயனேசுவுவை மறுதலிக்கின்றார்,
நேர்மை வாழ்வும் தராது!
ஆமென்.