ஆட்டின் அறிவு!

ஆட்டின் அறிவு!


வாக்கு: யோவான் 10:3-4. 


3. வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறான்.
4. அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது.


வாழ்வு:


ஆடும் கூட ஆயனை அறியும்,

அவன் குரல் கேட்டு நடக்கும். 

ஓடும் திருடன் ஓசை கேட்டும்,

உடன்பட மறுத்துக்கிடக்கும்.

தேடும் தெய்வக் குரலழைத்தும்,

தெரியாதது போல் நடக்கும்,

வாடும் மனிதப் பெருங் கூட்டம்,

வறுமையில்தான் கிடக்கும்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

ஆயர்!

ஆயர்!

வாக்கு: யோவான் 10:1-2. 1.

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்.2. வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்.

வாழ்வு:

ஆயர் பண்பை ஆண்டவர் சொன்னார்.

அறிந்து நடப்பது நம் கடமை.

நேயர் எவரும் நேரெதிர் எண்ணார்;

நேர்மை தரட்டும் நம் உடமை.

தீயர் ஒளிந்து திருடிட முனைவார்;

திருட்டு தடுப்பது நம் கடமை.

தூயர் வாக்கின் மழையில் நனையார்

தேடா மீட்பரும், நம் உடமை!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

yovaan 9:39-41.

காணாக் கண்கள்!

நற்செய்தி: யோவான் 9:39-41.

நல்வழி:


காணாக் கண்கள் கொண்டவனாய்,

கனவில் பறந்தேன், போதுமய்யா. 

வீணாம் நினைவின் விளைவுகளால்,


விண்ணை மறந்தேன், தீது அய்யா.

கோணார் நேர்மையில்  இனி நடப்பேன்;


கிறித்து பிறப்பால் மாற்றுமையா.

வாணாள் முழுவதும் ஆவியரின்,

வரங்கள் சிறக்க ஊற்றுமையா! 


ஆமென். 


கெர்சோம் செல்லையா.   

யோவான் 9:35-38.

நல்வழி:


மரியின் மகனாய் வந்தவரை,

மனிதன் என்பதும் சரியே.

அறிவின் வாக்குகள் தந்தவரை,

ஆசான் என்பதும் சரியே. 

தெரியா வழியில் அழைப்பவரை,

தெய்வ மகன் எனில், சரியா? 

எரிகடல் மீட்டெனை ஆள்வதனால்,

இப்படிக் கூறல், மிகச்சரியே! 


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.       

யோவான் 9:34.

புறந்தள்ளுகிறார்!

நல்வழி:


நல்லது சொன்னால் நம்ப மறுப்பார்,

நல்வாக்கினரை விரட்டுகிறார். 

சொல்வது யாரென ஆளைப் பார்ப்பார்,

சொல்கிற ஏழையை மிரட்டுகிறார்.

வெல்வது இதனால் மடமை என்பார்,

விரும்பார் விட்டு அகலுகிறார்.

உள்ளதை உள்ள படியாய்க் காண்பார்,

உண்மை இறையுள் புகலுகிறார். 


ஆமென். 


கெர்சோம் செல்லையா. 

கண்ணுடன் வாயும் திறந்தது!

நற்செய்தி: யோவான் 9:30-33.

நல்வழி:


கண்ணுடன் வாயும் திறந்ததுவே;

கடவுட் பற்றும் புறம் வருதே. 

எண்ணினில் இவைகள் இறையருளே. 

இயேசு வழங்கும் நற்பொருளே.

மண்ணினில் வந்தது நம் திறமா?

மறுபடி உயர்வதும் நம் அறமா?

திண்ணையில் விழுமுன் நினைப்போமா?


தெய்வ அன்பில் இணைப்போமா?


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.

யோவான் 9:26-29.

நல்வழி:


அடியாரென்கிற நற்றமிழ் வாக்கு,

அடி ஆளாகி  மருவிற்றே. 

துடியாதவரின் திருப்பணிப்போக்கு,

தூய வழியில் அருகிற்றே. 

மடியாதவராம் இறையின் நோக்கு,

மன்னிப்பாய்  உருகிற்றே.  

விடியாதிருக்கும் நிலையை நீக்கு;


விண்ணின்பம் பெருகிற்றே!


ஆமென். 

-கெர்சோம் செல்லையா.

பழிச்சொல்!

இறை வாக்கு: யோவான் 9:24-25.

இறை வழி:


வெறுப்பு கொண்டோர் பேச்சு கேட்டால்,

வீண்பழிச் சொற்கள் நிறைந்திருக்கும்.

பொறுப்பு அற்றோர் செயற்பாட்டால்,

பொறுமை கூட குறைந்திருக்கும். 

நெருப்பு என்கிற பழிச்சொல் எரித்தால்,

நீங்களும் நானும் என்னாவோம்?

விருப்பு இறையுள் நாம் சிரித்தால்,  


விடுதலையாகிப் பொன்னாவோம்!  


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.

என் மொழி!

என் மொழிக் கொள்கை!

பன் மொழி பேசும் என் பழ நாட்டில்,

தன் மொழி உயர்ந்தது என்றுரைப்பார்

இன் மொழி அறியாதிருப்பதானால்,

நன் மொழி கேட்டு, பிழைக்கப் பார்.


எம்மொழி கேட்கையில், அம்மொழி வெறுப்பில்,

தம் மொழி வளர்க்க மறப்பதானால்,

செம்மொழி தமிழில் இம்மொழி சொல்வேன்;

உம் மொழி தழைக்க, உழைக்கப் பார்!


-கெர்சோம் செல்லையா.