எவ்வளவு உண்மை?

எத்தனை விழுக்காடு உண்மை?


எத்தனை விழுக்காடென்று  பார்த்தேன்;

என்னுள் உண்மை எவ்வளவு?

அத்தனை அளவாய்  ஆண்டவர் பார்த்தேன்;

அறிவுக் குறைவு அவ்வளவு!

மொத்தமும் உண்மையாக்கக் கேட்டேன்;

மும்மை இறையின் அளவு. 

நித்தமும் வளரச் சொல்வதும் கேட்டேன்;

நிறைக்கும் அருளின் அளவு!


-கெர்சோம் செல்லையா. 

யோவான் 10:39-40.

காப்பவர் இறைவன்!

வாழ்வு:


என்னிடம் ஒருவர் சொன்னதுபோலே, 

என் தலை போகலை கழுத்துமேலே. 

இன்றின்னேரமும் அதே நிலையே; 

இயேசுதானே என் தலையே! 

முன்னவர் குறித்த நாளின் முன்பே,

முடிவு வருமோ? முடியாதன்பே!

நன்னாள் அந்நாள் இறைநாளென்றே,

நம்பி முடிப்போம் நற்பணி ஒன்றே!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

வன்முறை!

வன்முறை!


வன்முறை என்றும் நன்முறை  அல்ல. 

வாள், தடி, குண்டுகள் கொன்று விடும்.

தன் முறை வரும்வரை பொறுப்பது நல்ல

தன்மையேயென்று சென்று விடும்.

என்முறை தவறிய பேச்சிலும் கூட 

இருக்கிற தீமையை அழித்து விடும். 

பன்முறை கேட்கும் அன்பையே நாட, 

பாவி நெஞ்சைக் கிழித்து விடும்!


-கெர்சோம் செல்லையா. 

பிறந்த நாள் வாழ்த்து அக்கா!

பிறந்த நாள் வாழ்த்து, அக்கா!

அக்கா என்கிற அம்மா,

அமைவதில்லை சும்மா.

இக்காலம் நான் கண்டு,

எழுத ஒருவர் உண்டு.

திக்கறு நாளில் நன்மை,

தெரிந்துதவிய தன்மை.

எக்குலம் என்று சொல்லும்;

இறை வழியில் வெல்லும்!

-கெர்சோம் செல்லையா.

படைத்தவர் பண்பு!

படைத்தவர் பண்பு!
வாக்கு: யோவான் 10:37-38.  

வாழ்வு:


படைத்தவர் பண்பு யாரில் உண்டு?

பாரில் பலரிடம் தேடினேன்.

உடைத்தவர், உடைப்பவர் பலரைக் கண்டு,

உள்ளில் வருந்தி வாடினேன். 

கிடைப்பவர் இனிமேல் இல்லை என்று,

கேள்விப் பெட்டியை மூடினேன்.

அடைத்திடும் வேளை, இயேசு நின்று,

அன்பிலணைக்கவே, பாடினேன்!


ஆமென். 


கெர்சோம் செல்லையா.  

இறை மைந்தன்!

இறை மைந்தன்!
வாக்கு: யோவான் 10:34-36.


34. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா?
35. தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க,
36. பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?  

வாழ்வு:  


பிறந்து, வளர்ந்த, வாழ்வும் சொல்லும்,

பிறப்பில் இயேசு இறைமைந்தன். 

இறந்து, எழுந்த, உயிர்ப்பும் சொல்லும்,

இவரே நமக்கு இறைமைந்தன். 

மறந்து கூடத் தீமையும் எண்ணார்;

மாட்சி வடிவே இறைமைந்தன்.

துறந்து வந்த விண்ணிலும் சேர்ப்பார்;

தூயர் விடிவே இறைமைந்தன்! 


ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

இறை நிந்தை!

இறை நிந்தை!


வாக்கு: யோவான் 10: 31-33.  

  1. 31. அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள்.
  2. 32. இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.
  3. 33. யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி, இவ்விதமாக தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.

வாழ்வு: 


சொல்லால் வெல்ல இயலாதாரே,

சுமத்திச் செல்வார் வீண்பழி. 

கல்லால் அடிக்கவும் துணிகிறாரே,

காணுமோ, நம் கண் விழி?

நல்லார் தெரிந்தும் நடக்கிறாரே;

நன்மை மட்டும், அவர் மொழி.

எல்லாத் தீங்கும் அழித்தொழிக்கும்,

இறைவழியே நல் வழி! 

ஆமென்.

 
-கெர்சோம் செல்லையா. 

யோவான் 10:29-30.

எண்ணும் இறையை எண்ணிப் பாரும். 

எண்ணிப் பார்த்தால் ஒன்றாகும். 

மண்ணில் இறங்கி மனிதம் கூறும்,

மகனும் தந்தையும் ஒன்றாகும். 

விண்ணின் அருளை வேண்டிக் கேளும்;

விந்தைப் பிறவியும் ஒன்றாகும். 

கண்கள் காணா காட்சியை ஆளும்,

கடவுளுக்குள் ஒன்றாகும்!

ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

ஆயன் குரல்!

ஆயன் குரல்!
வாக்கு: யோவான் 10:27-28. 

வாழ்வு:


ஆயன் குரலைக் கேட்கும் ஆடு,

அவன் வழி வந்து செல்லும். 

தூயன் வாக்கைக் கேட்பதோடு,

தொடர இறை பின் நில்லும்.

வாயும் வயிறும் வாழ்க்கை என்று,

வாழும் வழி தான் கொல்லும். 

தேயும் அந்நிலை தெரியும் முன்பு,

தெளிவு பெற்று வெல்லும்!

ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

யார் குற்றம்?

யார் குற்றம்?
வாக்கு: யோவான் 10:22-26.
22. பின்பு எருசலேமிலே தேவாலயப் பிரதிஷ்டைபண்டிகை வந்தது; மாரிகாலமுமாயிருந்தது.
23. இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார்.
24. அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்றார்கள்.
25. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது.
26. ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள்.


வாழ்வு:


நல்லவர் இயேசு, நன்மைகள் செய்தும்,

நம்ப மறுப்பது, யார் குற்றம்?

அல்லவை செய்து, அவற்றைக் கொய்யும்,

ஆணவம் கொண்டார் குற்றம்.

வல்லவர் இறையே, என்று நினைக்கும்,

வழியில் வராதிருப்பதும் குற்றம்.

சொல்கிற அன்புச் செயலே இணைக்கும்.

செய்யாதிருப்பது , நம் குற்றம்!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.