விண்ணைக் கண்டோர்!

விண்ணைக் கண்டோர்!

நற்செய்தி: யோவான் 3:31-33.

நல்வழி:
மண்ணைக் கண்டோர் மண்ணைக் கூட்டின்,
மகிழும் மனிதர் ஏற்றிடலாம்.
விண்ணைக் கண்டோர் விண்ணைக் காட்டின்,
விரும்பா பலபேர் தூற்றிடலாம்.
உண்மைத் தெரியார் உள்ளம் பூட்டின்,

உதவா கதையென மாற்றிடலாம்.
கண்ணைத் திறப்பீர்; கடவுட் ஏட்டின், 
கருவாம் அன்பில் போற்றிடலாம்!
ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

தாழ்மை!

தாழ்மை!
நற்செய்தி : யோவான் 3:30.

நல்வழி:
வண்டு சுவைத்து, பறக்கின்ற

வாழ்வும், வழியும் கேளேன்.
உண்டு மகிழ்ந்து, மறக்கின்ற
உயர்வும், உலகும் கேளேன்.
தண்டு வடத்தை அறுக்கின்ற,
தலையும், கையும் கேளேன்.
தொண்டு திறந்து பிறக்கின்ற,

தூயன் அடியே கேட்பேன். 
ஆமென்.

-செல்லையா.

நிறைவு தரும் தொண்டு!

நிறைவுதரும் தொண்டு!
நற்செய்தி: யோவான் 3:28-29.

நல்வழி: 
எந்தச் செயலைச் செய்தாலும்,
ஈசன் புகழுக்கில்லையெனில்,’
அந்தப் பணியில் மகிழ்வில்லை.
அறியாருக்கும் நிறைவில்லை.
சொந்தப் புகழ்ச்சி விரும்பாமல்,
சொல்லும் செயலும் ஏசு எனில்,
இந்தத் தொண்டில் துயரில்லை. 
அடியாருக்கும் குறையில்லை!
ஆமென்.
-செல்லையா.

இறையருளும் இனிமை!

இறையருளும் இனிமை!

நற்செய்தி 3:27.


27. யோவான் பிரதியுத்தரமாக: பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்.


நல்வழி: 


இறை அருளும் இனிமை போதும்;

இந்த அறிவை ஏற்க வாரும்.

குறை பொருளை நாடிப் போகும், 

குற்ற நெஞ்சை மீட்கத் தாரும்.

நிறை வாழ்வின் முழுமை காணும்;

நீவிர் தேடா இயேசு பாரும்.

பிறை வளரும் காட்சியாகும்,

பேரரசுள் வந்து சேரும்!


ஆமென்.


-செல்லையா.