ஒளியும், விளக்கும்!

ஒளி வேறு, விளக்கு வேறு!

நற்செய்தி வாக்கு: யோவான்: 1:6-9.

6. தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான்.7. அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்.8. அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்.9. உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.

நல்வழி பாட்டு:

வெளிச்சம் கொடுக்கும் விளக்கானாலும்,

விளக்கும் வெளிச்சமும் வேறாகும்.

ஒளியை வழங்கும் யோவாணுர்ந்து,

உரைக்கும் வாக்கும் பேறாகும்.

தெளிவைப் பெற்ற அடியாரெவரும்,

தெய்வம் வாழ்த்தும் விளக்காகும்.

எளிமை, தாழ்மை, தூய்மை, அன்பு,

இவையே இயேசுவின் ஒளியாகும்!

ஆமென்.

-செல்லையா.

ஒளி!

ஒளி!
நற்செய்தி வாக்கு: யோவான் 1:4-5. 
4. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
5. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை. 
நல்வழி பாட்டு: 
இருளாயிருக்கும் இப்புவியெங்கும், 

இறையே ஒளியாய் இருக்கின்றார். 

அருளாயதனை நமக்கு ஈந்தும், 

அறிவில்லாதார் வெறுக்கின்றார். 

ஒருநாளேனும் உண்மை உணர்வார்;

உலகம் ஒளியை வெல்லாது. 

பொருளாயிதனைப் பாடி வடிப்பேன்; 

புனைந்துரைத்தல் இல்லாது! 


ஆமென். 


-செல்லையா.

வேண்டு!

அருள் வடிய வேண்டு! 

தொடக்கம் அறியாத் தொற்று ஓன்று,  


தொண்டையின் கீழே வருகிறது. 

கிடக்கும் இடமும், மருந்துமிலாது, 


கேட்கவே அச்சம் தருகிறது. 


அடக்கம், எரித்தல் சடங்கும் இன்று, 

ஆட்களில்லாமல் முடிகிறது.  


முடக்கும் தொற்று முடிய வேண்டு.

முன்னே இறையருள்  வடிகிறது!  

-செல்லையா.

இறை வாழ்க!

இறை வாழ்க!

நற்செய்தி வாக்கு: யோவான்  1:1-3.  

  1. நல்வழி பாட்டு: 
  2. படைப்பினை எவரும் பார்க்கும் முன்பே,
  3. படைத்தவர் இருந்தார்; அவர் வாழ்க! 
  4. விடையறியாரும் வேண்டும் முன்னே,  
  5. விண் வாக்கானார்; அவர் வாழ்க!
  6. கிடைத்திட அரிதாம் மீட்டிடும் அருளே,  
  7. கிறித்துவாய் வந்தார்; அவர் வாழ்க!   
  8. உடைத்திடுவோரும் உயிர் வாழ்வதற்கே,     
  9. உயிரும் ஈந்தார்; அவர் வாழ்க!  
  10. ஆமென்.
  11. -செல்லையா. 

நாடோறும் தொழுவோம்!

கிறித்துவில் வாழ்வு: 
நாடோறும் கோயில் சென்று, 
நன்கு தொழுதார் அந்நாளில். 
கூடேறும் பறவை நினைத்து,
கோயில் நோக்கார் இந்நாளில். 
ஈடேறும் எண்ணம் கொண்டோர்,  
என்றும் தொழுவார் தம்முள்ளில். 
காடோடும், காரிருள் ஓடும்; 
கடவுள் ஆள்வார் நம்முள்ளில்! 
ஆமென். 
-கெர்சோம் செல்லையா. 

விண் சென்றார் விண்ணரசர்!

விண் சென்றார் விண்ணரசர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 24: 50-51.  

கிறித்துவில் வாழ்வு: 
எங்கிருந்து வந்தாரோ, 
அங்கு சென்றார் மீட்பர்.
இங்கு எவர் எண்வாரோ, 
இறை வாக்கு கேட்பர். 
தங்குமிடம் இது இல்லை. 
தாழ்பணிந்தால் அறிவர்.  
பொங்குமருள் பெருகிவர,  
பேரின்பம் பெறுவர்!  
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா. 

வாழ்த்து!

வெற்றி பெற்ற முதல்வரை வாழ்த்துவோம்!

குற்ற முரைத்தார்  குழிகளில் வீழ, 

கோட்டை பிடித்த முதல்வரே, 


உற்றவர் இனிமேல், உமக்கு யார் யார்? 


உண்மையில் ஏழை மனிதரே! 


தொற்றுகள் போன்று, ஒட்டியே வருவார்,


தூய்மை வெறுக்கும் தரகரே. 


பற்றினை என்றும், எளியரில் வைத்து, 


பாரை ஆள்வீர் தலைவரே! 


-கெர்சோம் செல்லையா

இறையன்பு இல்லம், 
24, செக்ரெட்டெரியட் காலனி, 
சென்னை-600099.

உழைப்பாளர் நாள் வாழ்த்து!

உழைப்பாளர் நாள் வாழ்த்து!  


எதனை உழைப்பெனச் சொல்கின்றார்? 

ஏய்ப்பவர் கொள்ளை அடிப்பதையா? 

இதனை இன்றையோர் சேர்த்ததினால்,

ஏழையர் கண்ணீர் வடிக்கலையா? 

புதனை சனியெனச் சொல்கின்றார்  

புரியும் தீமைக்கு முடிவிலையா?

அதனை மாற்றுவீர், அறிஞர்காள்,  

அடிபடும் நெஞ்சு துடிக்கலையா? 


-கெர்சோம் செல்லையா. 

காத்திருப்போம்!

காத்திருப்போம்!
கிறித்துவின் வாக்கு:  லூக்கா: 24:49.  

கிறித்துவில் வாழ்வு:  
பணியொன்றைத் தொடங்கும் நாம், 

பல்வகை அறிவு நாடுதல் போல்,  

அணி சூட்டும் இறைப்பணியில்

ஆவியின் அருளைப் பார்த்திருப்போம். 

பிணி நீக்கும் திருப்பணியில், 

பிழைகள் வராமல் இருப்பதற்கு,  

துணிவை நாம் கேட்டிடுவோம்;  

தூயன் காலடி காத்திருப்போம்! 

ஆமென். 


-கெர்சோம் செல்லையா.