எல்லாப் புகழும் இறைவனுக்கே!

எல்லாப் புகழும் இறைவனுக்கே!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:43.

43  உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்சென்றான். ஜனங்களெல்லாரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:
நற்பணி செய்யும் இடங்களிலே,
நடக்கும் அருஞ்செயல் யாராலே?
கற்பனைக்கெட்டா நற்செயலே,

காட்டு, நீயும் இறைவனையே.
அற்பரோ அவர் புகழ் பாடுகிறார்.
அறியாமையைத்தான் நாடுகிறார்.
பொற்பரன் இயேசுவை நாம் பார்த்து,
புகழ்வோம் இறையைக் குறைவறவே!
ஆமென்.

வாழ்விக்கும் இறைப்பற்று!

இறைப் பற்று!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 18: 42.


42  இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.  


கிறித்துவில் வாழ்வு:

தூற்றுவோரால் துயருறும்போதும்,

தொற்று நோயால் அயர்கிறபோதும்,

ஏற்றமேற முயல்கிறபோதும்,

எனக்கு வலிமை இறைப்பற்று.

மாற்றுகின்ற அருமருந்தாகும்;

மாறுகையில் திருவிருந்தாகும்.

தோற்று போகாப் பேரறிவாகும்;

தோழா, நீயும் இதைப் பற்று!

ஆமென். 

பார்க்க வேண்டும்!

பார்க்கவேண்டும்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:39-41.

39 இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார்.40 அவன் கிட்டவந்தபோது, அவர் அவனை நோக்கி:41 நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:

ஊர் உலகென்றுச் சுற்றித் திரிந்து,

ஒரே இனமாய்ப் பார்க்க வேண்டும்.

யார் நீ என்ற எதிர்ப்பிலும் புரிந்து,

என்னை உறவாய்ப் பார்க்க வேண்டும்.

நார் நாராக நைந்தோர்க்கென்று,

நற்பணி செய்துப் பார்க்கவேண்டும்.

நேர்மை என்ற இறையைக் கண்டு,

நெஞ்சிலிருத்திப் பார்க்க வேண்டும்!

ஆமென்.

கண்ணில்லார் யார்?

கண்ணில்லார் யார்?

கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:35-38.

35  பின்பு அவர் எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.

36  ஜனங்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான்.

37  நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன்: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான்.

38  முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாய்க் கூப்பிட்டான்.

கிறித்துவில் வாழ்வு:

விண்ணில் ஏறி, விரைந்து இறங்கும்,

வித்தை கற்ற நம்மவர்க்கு,

கண்ணில்லாமல் தவிப்போர் நெஞ்சில்,

கரையும் கண்ணீர் தெரியலையே!

எண்ணிக்கையில் குறைந்தோர் இவரின்,

ஏக்கம் தீர்க்கும் வழிமுறைகள்,

பண்ணும் எவரும் நன்மை காண்பார்;

படைப்பின் புதிரும் புரியலையே!

ஆமென்.

கண்ணீரில் முடிக்காதீர்!

கற்றவராய்ப் பணி செய்யும்!
குற்றமற்றோர் என்றறிந்தும்,

கொண்டு வந்து அடிக்காதீர்.

பெற்றவரும் வெறுக்கின்றார்;

பெரும் பழியைப் பிடிக்காதீர்.

மற்றொரு நாள் தொடர்ந்து வரும்;

மதிப்பிழக்கத் துடிக்காதீர்!

கற்றவராய்ப் பணி செய்யும்;

கண்ணீரில் முடிக்காதீர்!


-கெர்சோம் செல்லையா.

வன்முறை!

எல்லா அரசுத் துறைகளில் காணும் அடிப்படைத் தவறுகள்தான் காவல்துறையிலும் காணப்படுகின்றன. தவற்றின் தொடக்கத்தைப் பணியாளர் தேர்வில் பார்க்கிறோம். திறன் பார்த்து நேர்மையாய்த் தேர்வு செய்தால், திறமையான பணியாளர்கள் நேர்மையாய்ப் பணியாற்றுவார்கள். அது ஒரு கனாக் காலமாயிற்று!
யாரை எங்கே பணியமர்த்தினால் அமைதி நிலவும் எனத்தெரிந்து, முன்பு பணியமர்த்தினார்கள். இன்று, ஆளுங்கட்சி அரசியலுக்கு, அடிபணிந்து நடப்பவர்கள், சாதிக்காரர்கள், காசு கொடுத்து இடமாற்றம் பெறுபவர்கள் என்று பணி நியமனங்கள் இருப்பதால், சட்டம் ஒழுங்கு எல்லாம் கானல் நீராயிற்று.

சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளைப் பிடித்துச் சட்டத்தின் முன்பு நிறுத்தவும், வன்முறை ஓன்றுதான் வழியென்று நாமும் நமது காவல்துறையும் நினைப்பது பெருந்தீங்காயிற்று.

அடி, உதை, சித்திரவதை, கொலை என்றில்லாமல், குற்றந்தடுக்கவும், குற்றவாளிகளைப் பிடிக்கவும் இயலும். ஆனால் முயலவில்லை!

குற்றம் புரியாத ஒருவரை, குற்றவாளியாய்க் கொண்டுவந்து அடைப்பது, கொடுமையிலும் கொடுமையென்று, இப்போதாவது நாம் உணரத் தொடங்கலாமே!