இறைமகன் தொட்டபின் இறப்பாரோ?
நற்செய்தி மாலை: மாற்கு 9:25-27.
“அப்போது மக்கள் கூட்டம் தம்மிடம் ஓடிவருவதை இயேசு கண்டு, அந்தத் தீய ஆவியை அதட்டி, ‘ ஊமைச் செவிட்டு ஆவியே,உனக்குக் கட்டளையிடுகிறேன்; இவனை விட்டுப் போ; இனி இவனுள் நுழையாதே ‘ என்றார். அது அலறி அவனுக்கு மிகுந்த வலிப்பு உண்டாக்கி வெளியேறியது. அச்சிறுவன் செத்தவன் போலானான். ஆகவே அவர்களுள் பலர், ‘ அவன் இறந்துவிட்டான் ‘ என்றனர். இயேசு அவன் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார். அவனும் எழுந்தான்.”
நற்செய்தி மலர்:
இறைமகன் தொட்டபின் இறப்பாரோ?
இறந்தவர் எழுந்ததை மறப்பாரோ?
மறையுரை வாக்கை வெறுப்பவரோ
மறைகிறார், இதையும் மறுப்பாரோ?
பிறை நிலவாகவே நான் தேய்ந்தேன்.
பிழைகளின் பெருக்கில்தான் மாய்ந்தேன்.
நிறைவின் உருவில் இயேசு வந்தார்;
நெஞ்சைக் கொடுத்தேன், உயிர் தந்தார்!
ஆமென்.
Month: September 2016
இயலும் என்று நம்பாமல்…
இயலும் என்று நம்பாமல்….
நற்செய்தி மாலை: மாற்கு 9:20-24.
” அவர்கள் அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடன் அந்த ஆவி அவனுக்கு வலிப்பு உண்டாக்க, அவன் தரையில் விழுந்து புரண்டான்; வாயில் நுரை தள்ளியது. அவர் அவனுடைய தந்தையைப் பார்த்து, ‘ இது இவனுக்கு வந்து எவ்வளவு காலமாயிற்று? ‘ என்று கேட்டார். அதற்கு அவர், ‘ குழந்தைப் பருவத்திலிருந்து இது இருந்துவருகிறது. இவனை ஒழித்துவிடத் தீயிலும் தண்ணீரிலும் பலமுறை அந்த ஆவி இவனைத் தள்ளியதுண்டு. உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும் ‘ என்றார். இயேசு அவரை நோக்கி, ‘ இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும் ‘ என்றார். உடனே அச்சிறுவனின் தந்தை, ‘ நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும் ‘ என்று கதறினார்.”
நற்செய்தி மலர்:
இயலும் என்ற நம்பிக்கை
இயேசுவில் வந்தால், பற்றாகும்.
முயலும் பார்ப்போம், என்பதுவோ
முற்றிலும் நம்பாக் கூற்றாகும்.
செயலில் விருப்பைக் காண்பதற்குச்
சிறிய குழந்தை போல் கேளும்.
வயலும் ஒருநாள் வாழ்வு தரும்;
வந்து நம்பி நிலத்தை உழும்!
ஆமென்,
புளிப்பு எது? இனிப்பு எது?
புளிப்பு எது? இனிப்பு எது?
வெளியே தெரியும் தோற்றம் கண்டு,
வெறுப்போ விருப்போ கொள்கின்றோம்.
எளிதாய் நாமும் எடைக்கல் போட்டு,
இருக்கும் உண்மையைக் கொல்கின்றோம்.
தெளிவாய் நோக்கும் தெய்வம் காட்டும்
திசையின் வழியையோ மறுக்கின்றோம்.
புளிப்பா? இனிப்பா? புரியாதவராய்
பொய்மையில்தானே இருக்கின்றோம்!
-கெர்சோம் செல்லையா.