எதை அறுப்பேன்?
நற்செய்தி மாலை: மாற்கு 9:43-46.
“உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதைவிட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள்.”
நற்செய்தி மலர்:
எந்தக் கையால் தீங்கு செய்தேன்?
எந்தக் காலால் அங்கு சென்றேன்?
இந்தக் கண்களில் எதனால் பார்த்தேன்?
என்று கேட்டால் பதிலோ அறியேன்!
தந்த உறுப்புகள் யாவும் தீங்காய்,
தவறே செய்தால் எதை அறுப்பேன்?
சொந்த நேர்மையில்லை, வெறுத்தேன்;
சொல்லால் கழுவும், தூய்மை பெறுவேன்!
ஆமென்.
Month: September 2016
விடுதலை
விடுதலை நாள் வாழ்த்து!
விடுதலை விருந்தை யாவரும் ருசிக்க,
விறகாய் எரிந்தோர் மறைந்திட்டார்.
நடுநிலை தவறி, ஒருசிலர் புசிக்க,
நாட்டை விற்போர் நிறைந்திட்டார்.
கெடுதலை உணர்ந்து, கீழோர் உயர,
கடுமையாய் உழைப்போர் குறைந்திட்டார்.
அடுத்தவர் வாழ, அன்பைப் பகிர்ந்தால்,
அப்பெரு நாட்டை முறைப்போர் யார்?
-கெர்சோம் செல்லையா.
வெறுமனே விதைப்பாரோ?
வெறுமனே யார்தான் விதைக்கின்றார்?
நற்செய்தி மாலை: மாற்கு:9:42.
” என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது.”
நற்செய்தி மலர்:
ஏழைக் கிறித்தவர் இயலார் என்று
ஏளனமாகவே எண்ணுகிறார்.
கோழைத்தனமென தாழ்மையை நினைத்துக்
கொலையும்கூட பண்ணுகிறார்.
நாளை விளைவது இன்றைய வித்து;
நம்பாதவர் இவர் புதைக்கின்றார்.
வேளை வரும்போதிவரும் அறுப்பார்;
வெறுமனே யார்தான் விதைக்கின்றார்?
ஆமென்.
இரக்கம்
மறக்க வேண்டாம் நன்றிக் கடனாம்!
நற்செய்தி மாலை: மாற்கு 9:41.
“நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ”
நற்செய்தி மலர்:
இரக்கம் என்பது இறையின் அகமாம்;
இதனால்தானே இருக்கின்றோம் நாம்.
உருக்கம் உள்ளோர் இறையின் மகவாம்.
ஒவ்வோர் இனத்திலும் இருக்கின்றாராம்.
அரக்கர் என்று ஒதுக்குதல் பிழையாம்.
அனைவரும் தெய்வச் சாயல் நிழலாம்.
மறக்க வேண்டாம் நன்றிக் கடனாம்;
மானம் காக்க இதுவே உடையாம்!
ஆமென்.
நட்பு
நட்பின் நாள் வாழ்த்து!
மாற்று சமய மனிதரையும்
மதித்துத் தம்முடன் சேர்ப்போர் யார்?
நேற்று வெறுத்து விட்டதினால்
நிகழ்ந்த பிளவைப் பார்ப்போர் யார்?
காற்று, மழை நீர், நெருப்பாக,
கடவுளின் இணைப்பைக் கோர்ப்போர் யார்?
தூற்றுவோரும் பின்வருவார்;
தூய அன்பை வார்ப்போர் யார்?
-கெர்சோம் செல்லையா.
வேற்றுமைகள் இருந்தாலும்….
நற்செய்தி மாலை: மாற்கு 9:38-40.
“அப்பொழுது யோவான் இயேசுவிடம், ‘ போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர் ‘ என்றார். அதற்கு இயேசு கூறியது: ‘ தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேச மாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.”
நற்செய்தி மலர்:
மாற்று அவையின் கிறித்தவரை,
மதிக்க மறக்கும் கிறித்தவரே,
நேற்று இப்படிப் பிரித்ததினால்,
நிகழ்ந்த தீமையும் அறிவீரே.
தோற்று போகும் அலகையவன்,
தொடுக்கும் அம்பு பிரிவாமே.
வேற்றுமைகள் இருந்தாலும்,
வேண்டும் அன்பு உறவாமே!
ஆமென்.
பிள்ளையைப் பார்த்துப் பயில்வோம்!
பிள்ளையைப் பார்த்து, கற்போம்!
நற்செய்தி மாலை: மாற்கு 9:35-37.
“அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், ‘ ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும் ‘ என்றார். பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, ‘ இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
பிள்ளை நெஞ்சில் பெருமை இல்லை;
பேச்சு, செயலில் கருமை இல்லை.
கள்ளச் சிரிப்பு என்றும் இல்லை;
கயமையென்று ஒன்றும் இல்லை.
உள்ளம் இதுபோல் நம்மில் இல்லை;
உணராதிருக்க பொம்மை இல்லை.
பள்ளம் விழுந்தோம் எழும்பவில்லை;
பலநாள் படுக்க நாம், குழந்தையுமில்லை!
ஆமென்.
யாவரும் ஒன்றே
யாவரும் இணையெனப் பாரீர்!
நற்செய்தி மாலை: மாற்கு 9:33-34.
” அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, ‘ வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்? ‘ என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக் கொண்டு வந்தார்கள்.”
நற்செய்தி மலர்:
தன்னைப் பெரியவன் என்றே எண்ணித்
தவறாம் ஏணியில் ஏறுகின்றார்.
முன்னால் எழும்பும் ஏழையைத் துரத்தி,
முழுப் பகையாலே சீறுகின்றார்.
இன்னாள் இதையே சாதியென்றாக்கி,
ஏற்றத் தாழ்வை வளர்க்கின்றார்.
என்னாளாயினும் மாறா இறையோ,
யாவரும் இணையென அளக்கின்றார்!
ஆமென்.
பிறந்த நோக்கம்
உலகில் வந்த நோக்கம் அறிவோம்!
நற்செய்தி மாலை: மாற்கு 9:30-32.
“அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஏனெனில், ‘ மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார் ‘ என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள்.”
நற்செய்தி மலர்:
என்றோ ஒரு நாள் இறப்பது அறிவோம்.
என்று எப்படி என்பதை அறியோம்.
இன்று இதனைத் தெரியார் போன்று,
அன்று அடியார் நின்றதும் அறிவோம்.
ஓன்று மட்டும் தெரிந்து கொள்வோம்.
உலகில் வந்த நோக்கம் தெளிவோம்.
தொன்று தொட்டு ஆளும் இறையின்
தூய திட்டம் புரிந்து வாழ்வோம்!
ஆமென்.
பேய்கள் நடுங்கும் பெயர் எதுவோ?
பேய்கள் நடுங்கும் பெயர் எதுவோ?
நற்செய்தி மாலை: மாற்கு 9:28-29.
“அவர் வீட்டில் நுழைந்ததும் அவருடைய சீடர் அவரிடம் தனிமையாக வந்து, ‘ அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை? ‘ என்று கேட்டனர். அதற்கு அவர், ‘இவ்வகைப் பேய் இறை வேண்டலினாலும் (நோன்பினாலும்) அன்றி வேறு எதனாலும் வெளியேறாது’ என்றார்.”
நற்செய்தி மலர்:
எந்த பேயும் நடுநடுங்கும்;
எந்த பெயரும் அடங்கிவிடும்.
அந்த திருப்பெயர் அறிவோமா?
அவரை நம்மில் பெறுவோமா?
இந்த நாளிலும் இது உண்மை;
இயேசு பெயரின் வல்லமை.
சொந்த அறிவில் சொல்கின்றேன்;
சொத்தாம் இயேசுவில் வெல்கின்றேன்!
ஆமென்.