மற்றொரு உறவைத் தவறாய்த் தேடல்…
நற்செய்தி மாலை: மாற்கு 10:10-12.
“பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர். இயேசு அவர்களை நோக்கி, ‘ தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்’ என்றார்.”
நற்செய்தி மலர்:
மற்றொரு உறவைத் தவறாய்த் தேடல்,
மாபெரும் குற்றம் தெரிந்திடுவீர்.
கற்றவர்கூட கறை படிந்துள்ளார்;
கண்ணீருடனே திருந்திடுவீர்.
பற்றும் உறுதி கிறித்துவில் இருந்தால்,
பண்பின் வாழ்வை விரும்பிடுவீர்.
குற்றம் நீங்கித் தூய்மையில் வளர்வீர்;
குருசை நோக்கித் திரும்பிடுவீர்!
ஆமென்.
Day: September 1, 2016
இணைதலும் பிரிதலும்
இணைப்பது இறைவன், பிரிப்பது பிசாசு!
நற்செய்தி மாலை: மாற்கு 10:5-9.
“அதற்கு இயேசு அவர்களிடம், ‘ உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார். படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், ‘ ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். ‘ இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
சிரித்து வாழ, வேண்டும் என்று,
சீரிய கருத்து, கொண்டவரே,
கரித்து கொட்டும், மனிதர் முன்பு,
கடவுளின் வாக்கு, எண்வீரே.
விரித்து வைக்கும், வலையில் கன்று,
விழுமா என்று, பார்ப்பார் போல்,
பிரித்து வைக்கும், நோக்கில் இன்று,
பிசாசும் உழைப்பது, காண்பீரே!
ஆமென்.
கடவுள் எங்கே?
கடவுள் எங்கே?
கடவுளைக் காண விருப்பிருந்தால்,
கடவுள் தன்னைக் காண்பிப்பார்.
காண விரும்பார் கண்டடையார்;
கலங்கி இல்லை என்றுரைப்பார்.
படைப்பின் வழியாய்க் காண்பித்தார்;
பாரிலுள்ளோர் இதைப் பார்த்தார்.
பார்த்தவர் தவறிப் பார்த்துவிட்டார்;
படைப்பைத் தெய்வமாய்ச் சேர்த்துவிட்டார்.
இடைப்பட்ட நாளில் வெளிப்பட்டார்;
இசுரவேலரைத் தேர்வு செய்தார்.
எழுதிய சட்டம் இவர்க்களித்தார்;
இவரோ எதிர்த்து அருள் இழந்தார்.
கடைசி நாட்களில் காட்சி தந்தார்;
கனிந்து மகனாய் வெளி வந்தார்.
காண விரும்பின் இயேசுவைப் பார்;
கடவுள் அன்பாய் இருக்கின்றார்!
-கெர்சோம் செல்லையா.
பிரிதல்
கருத்து வேறுபாட்டால் பிரிதல்…
நற்செய்தி மாலை: மாற்கு 10:1-4.
“இயேசு அங்கிருந்து புறப்பட்டு யூதேயப் பகுதிகளுக்கும் யோர்தான் அக்கரைப் பகுதிக்கும் வந்தார். மீண்டும் மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவரும் வழக்கம் போல மீண்டும் அவர்களுக்குக் கற்பித்தார். பரிசேயர் அவரை அணுகி, ‘ கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா? ‘ என்று கேட்டு அவரைச் சோதித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழியாக, ‘ மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன? ‘ என்று கேட்டார். அவர்கள், ‘ மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார் ‘ என்று கூறினார்கள்.”
நற்செய்தி மலர்:
கருத்து வேறுபாட்டால் பிரிதல்,
கடவுளின் பிள்ளைக்கு முறைதானோ?
வெறுத்து ஒதுக்கி, விட்டுச் செல்லல்,
விவிலியம் கூறும் மறைதானோ?
ஒருத்திக்கு ஒருவன் என்று வாழ்தல்,
உண்மைக் கிறித்தவம் தெரியீரோ?
பரத்தமையாலே விழுந்தவர் கோடி,
பண்பின் வாழ்வைத் தெரிவீரோ?
ஆமென்.
உப்பே!
கரைந்து போகும் உப்பாய்…
நற்செய்தி மாலை: மாற்கு 9:49-50.
“ஏனெனில் பலிப்பொருள் உப்பால் தூய்மையாக்கப்படுவதுபோல் ஒவ்வொருவரும் நெருப்பால் தூய்மையாக்கப்படுவர். உப்பு நல்லது. ஆனால் அது உவர்ப்பற்றுப் போனால் எதைக்கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்குவீர்கள்? நீங்கள் உப்பின் தன்மை கொண்டிருங்கள். ஒருவரோடு ஒருவர் அமைதியுடன் வாழுங்கள்.
நற்செய்தி மலர்:
மறைந்து செல்லும் வேரே,
மரத்தை மண்ணில் நிறுத்தும்.
கரைந்து போகும் உப்பே,
கறியில் சுவையை இருத்தும்.
இரைந்து போடும் கூச்சல்,
எப்படி நிம்மதி கொடுக்கும்?
விரைந்து அறிவாய், அவையே,
விளம்பரப் பொய்கள் கெடுக்கும்!
ஆமென்.
சிறந்த விழி!
சிறந்த விழி, இறையின் மொழி!
நற்செய்தி மாலை: மாற்கு 9:47-48.
” நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது. நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது.”
நற்செய்தி மலர்:
இரு கண் கொண்டு பார்த்துத் தவறின்,
எந்தக் கண்ணைக் குறை சொல்வேன்?
ஒரு கண்ணோடு உம்மையடைய,
உதவும் கண்ணாய் எதைக் கொள்வேன்?
மறு கண் வேண்டி உம்மைப் பார்த்தேன்;
மன்னா, உம்மிடம் வழி கேட்டேன்.
சிறு பிழைகூடச் செய்யத் தடுக்கும்,
சிறந்த விழியாம் மொழி கேட்பேன்!
ஆமென்.
எதை அறுப்பேன்?
எதை அறுப்பேன்?
நற்செய்தி மாலை: மாற்கு 9:43-46.
“உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதைவிட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள்.”
நற்செய்தி மலர்:
எந்தக் கையால் தீங்கு செய்தேன்?
எந்தக் காலால் அங்கு சென்றேன்?
இந்தக் கண்களில் எதனால் பார்த்தேன்?
என்று கேட்டால் பதிலோ அறியேன்!
தந்த உறுப்புகள் யாவும் தீங்காய்,
தவறே செய்தால் எதை அறுப்பேன்?
சொந்த நேர்மையில்லை, வெறுத்தேன்;
சொல்லால் கழுவும், தூய்மை பெறுவேன்!
ஆமென்.
விடுதலை
விடுதலை நாள் வாழ்த்து!
விடுதலை விருந்தை யாவரும் ருசிக்க,
விறகாய் எரிந்தோர் மறைந்திட்டார்.
நடுநிலை தவறி, ஒருசிலர் புசிக்க,
நாட்டை விற்போர் நிறைந்திட்டார்.
கெடுதலை உணர்ந்து, கீழோர் உயர,
கடுமையாய் உழைப்போர் குறைந்திட்டார்.
அடுத்தவர் வாழ, அன்பைப் பகிர்ந்தால்,
அப்பெரு நாட்டை முறைப்போர் யார்?
-கெர்சோம் செல்லையா.
வெறுமனே விதைப்பாரோ?
வெறுமனே யார்தான் விதைக்கின்றார்?
நற்செய்தி மாலை: மாற்கு:9:42.
” என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது.”
நற்செய்தி மலர்:
ஏழைக் கிறித்தவர் இயலார் என்று
ஏளனமாகவே எண்ணுகிறார்.
கோழைத்தனமென தாழ்மையை நினைத்துக்
கொலையும்கூட பண்ணுகிறார்.
நாளை விளைவது இன்றைய வித்து;
நம்பாதவர் இவர் புதைக்கின்றார்.
வேளை வரும்போதிவரும் அறுப்பார்;
வெறுமனே யார்தான் விதைக்கின்றார்?
ஆமென்.
இரக்கம்
மறக்க வேண்டாம் நன்றிக் கடனாம்!
நற்செய்தி மாலை: மாற்கு 9:41.
“நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ”
நற்செய்தி மலர்:
இரக்கம் என்பது இறையின் அகமாம்;
இதனால்தானே இருக்கின்றோம் நாம்.
உருக்கம் உள்ளோர் இறையின் மகவாம்.
ஒவ்வோர் இனத்திலும் இருக்கின்றாராம்.
அரக்கர் என்று ஒதுக்குதல் பிழையாம்.
அனைவரும் தெய்வச் சாயல் நிழலாம்.
மறக்க வேண்டாம் நன்றிக் கடனாம்;
மானம் காக்க இதுவே உடையாம்!
ஆமென்.