நீ வா…

நீ வா என்று அழைக்கின்றார்!
நற்செய்தி மாலை: மாற்கு 8:34-35.
“பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, ‘ என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்.”

நற்செய்தி மலர்:
ஈவாய்ப் பெற்ற இம்மையின் வாழ்வை,
இறைவனின் பணிக்கென அமைப்பவர் யார்?
நோவாய்ப்பட்ட மானிடம் தழைக்க,
நுகமாம் சிலுவை சுமப்பவர் யார்?
ஏவாள் ஆதாம் வழியில் செல்வார்,
இன்று மீள்வார், உழைப்பவர் யார்?
நீ வா என்று அழைப்பவர் குரலை
நெஞ்சில் ஏற்றால், பிழைப்பவர் பார்!
ஆமென்.

ஆண்டவருக்கே அறிவுரையா?

ஆண்டவருக்கே அறிவுரையா?
நற்செய்தி மாலை: மாற்கு 8:31-33.
” மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும் ‘ என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டார். ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், ‘ என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய் ‘என்று கடிந்துகொண்டார்.”

நற்செய்தி மலர்;
ஆண்டவருக்கே அறிவுரை கூறும்
அளவில் கிறித்தவர் நடக்கின்றார்!
அதனால்தானே ஊழியர் இன்று,
ஆணவம் கொண்டு கிடக்கின்றார்!
வேண்டுவோரின் வெறுமை காணும்,
வேந்தன் பற்றையும் பார்க்கின்றார்.
வெற்றியுள்ள வாழ்வும் ஈந்து,
விண்ணின் அரசில் சேர்க்கின்றார்!
ஆமென்.

எந்தன் தந்தை….

எந்தன் தந்தை செல்லையா!

“பிள்ளகைளின் பெருமை
அவர்கள் தந்தையரே.”
(நீதிமொழிகள் 17:6).

“புனிதன் இயேசு வழியில் வந்தாய்.
புரிந்த பணிக்குப் பெருமை தந்தாய்.
இனியவள் கிளாறியால் அறுவர் ஈந்தாய்;
இவர்கள் உயர உழைத்துத் தேய்ந்தாய்.

மனிதர் நடுவில் நிமிர்ந்தே நின்றாய்;
மதி என்றாலே நேர்மை என்றாய்.
தனியன் என்றார் முன்பு வென்றாய்;
தந்தைக்கிலக்கணம் தந்தே சென்றாய்!”

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 2 people

கெட்டார் கெட்டார்!

கெட்டார் கெட்டார்!

மெய்யென்றால் சதை காட்டும் திரைப்படத்தார்,
மேலோங்கி ஒழுக்கத்தைக் கைவிட்டார்.
பொய்யாலே புனைந்துரைக்கும் ஊடகத்தார்,
பொருளீட்ட அவ்வழுக்கை வெளியிட்டார்.

அய்யரெல்லாம் அருள் மறந்து போய்விட்டார்;
அறமறியாத் தலைவர்கள்தான் உயர்ந்திட்டார்.
உய்யும்வழி உரைப்பவரும் உறங்கிட்டார்.
உண்மையைத் தெரியாரோ கெட்டார், கெட்டார்!

-கெர்சோம் செல்லையா.

யார் எனத்தெரியாது…

இயேசுவை அறிவோம்!
நற்செய்தி மாலை: மாற்கு 8:27-30.
“இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, ‘ நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? ‘ என்று கேட்டார். அதற்கு அவர்கள் அவரிடம், ‘ சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர் ‘ என்றார்கள். ‘ ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்? ‘ என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, ‘ நீர் மெசியா ‘ என்று உரைத்தார். தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.”
நற்செய்தி மலர்:
யார் எனத் தெரியாமல் இயேசுவை வெறுத்தேன்;
எல்லாம் தெரிந்ததாய் அறிவினை மறுத்தேன்.
வேர் முதல் காய் வரை வேறு பிரித்தேன்;
வேண்டாம் கனியென தோலும் உரித்தேன்.
போர் வெறி கொண்டு நான் புனிதனைத் தடுத்தேன்;
புரிந்திடும் ஆவியைப் பெற்றபின் அடுத்தேன்.
நேர்வழி செல்வதே எளிதெனப் புரிந்தேன்;
நிம்மதி அங்கே, இயேசுவைத் தெரிந்தேன்!
ஆமென்.
கெர்சோம் செல்லையா.