நன்மை பெற்றவர்கள் உரைக்கட்டும்!

நன்மை பெற்றவர்கள் உரைக்கட்டும்!
நற்செய்தி மாலை: மாற்கு 1: 45.
“ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கிவந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.”

நற்செய்தி மலர்:
நன்மை பெற்றவர்கள் நன்றியில் உரைக்கட்டும்;
நற்பணியாளர்களோ தம்மைத் தாழ்த்தட்டும்.
வன்மை விரும்பிகளும் வந்தே காணட்டும்;
வானவர் திருப்பணியை வாழ்த்திப் பாடட்டும்.

அன்றைய அருட்பணியை அகத்தில் நோக்கட்டும்;
ஆண்டவர் செய்ததுபோல் அடியரும் செய்யட்டும்.
இன்றைய தவறுகளை உணர்ந்தே திருத்தட்டும்;
இறைப்பணியாளர்களும் உண்மையில் திருந்தட்டும்!
ஆமென்.